கை நரம்பை அறுத்துக்கொண்ட கல்லூரி மாணவி


கை நரம்பை அறுத்துக்கொண்ட கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 25 Oct 2021 9:11 PM GMT (Updated: 25 Oct 2021 9:11 PM GMT)

பளுகல் அருகே தூக்குப்போட்டு தற்கொலை ெசய்த கல்லூரி மாணவி சாவதற்கு முன்பு தனது கை நரம்பை அறுக்கும் படக்காட்சியை ஒரு வாலிபருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

களியக்காவிளை:
பளுகல் அருகே தூக்குப்போட்டு தற்கொலை ெசய்த கல்லூரி மாணவி சாவதற்கு முன்பு தனது கை நரம்பை அறுக்கும் படக்காட்சியை ஒரு வாலிபருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 
மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளையை சேர்ந்தவர் பீனா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகள் ஆதிரா (வயது 19). களியக்காவிளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  
இந்தநிலையில் ஆதிரா கடந்த 22-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பளுகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மாணவி கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், வாலிபர் ஒருவர் மிரட்டுவதாக புகார் கொடுத்தது தெரிய வந்தது. இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாணவி ஆதிரா தற்கொலை செய்து கொண்டதால், வாலிபரின் மிரட்டல் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கை நரம்பை அறுத்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது லேப்-டாப் மற்றும் செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவற்றில் சில புகைப்படங்கள், முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 
குறிப்பாக அவரது செல்போனில் நெடுமங்காட்டை சேர்ந்த ஒரு வாலிபருடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்ததாக தெரிகிறது. மேலும் ஆதிரா தற்கொலை செய்வதற்கு முன்பு தனது கை நரம்பை பிளேடால் அறுத்து அந்த காட்சியை ரத்தம் சொட்ட, சொட்ட பதிவிட்டுள்ளார். அந்த காட்சியை அப்படியே பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலம் நெடுமங்காடு வாலிபருக்கு அனுப்பி உள்ளார். அதற்கு பிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தூக்கில் தொங்குவதற்காக  மின்விசிறியில் கட்டப்பட்டு இருந்த துப்பட்டாவையும் பதிவு செய்து அனுப்பி உள்ளார். அந்த காட்சியை தான் அவர் இறுதியாக பதிவு செய்திருந்தார். இதையடுத்து நெடுமங்காடு வாலிபரை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடல் ஒப்படைப்பு
இதற்கிடையே மாணவியின் தாயார் பீனா நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டில் இருந்து குமரிக்கு வந்தார். பின்னர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்த மாணவியின் உடல் நேற்று மதியம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, உடல் வாகனம் மூலம் பளுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது.

Next Story