உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் 11-ந்தேதிக்குள் செலவு கணக்கை அளிக்க வேண்டும் விழுப்புரம் கலெக்டர் உத்தரவு


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் 11-ந்தேதிக்குள் செலவு கணக்கை அளிக்க வேண்டும் விழுப்புரம் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Oct 2021 5:11 PM GMT (Updated: 26 Oct 2021 5:11 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் 11-ந்தேதிக்குள் செலவு கணக்கை அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலை, தேர்தல்முடிவு அறிவிக்கப்பட்ட 12-ந்தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில்போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய வட்டார           வளர்ச்சி அலுவலரிடம் வருகிற 11-ந்தேதிக்குள் தாக்கல்செய்ய வேண்டும்.


 அதேபோல் தேர்தலில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தை உரிய அலுவலரிடம்   தாக்கல் செய்யவேண்டும்.
மேலும்,  தேர்தல் செலவு கணக்குத் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள்

 பெற்றுக்கொள்ளவேண்டும். தேர்தல் செலவு கணக்கு தாக்கல்செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படிதக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவராக ஆக்கப்படுவார்கள். 

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story