நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் அடித்துக் கொலை


நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 26 Oct 2021 8:12 PM GMT (Updated: 26 Oct 2021 8:12 PM GMT)

திசையன்விளையில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திசையன்விளை:
திசையன்விளையில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

பெயிண்டர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் ரமேஷ் (வயது 32). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று இரவு திசையன்விளை- நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகே ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தகராறு

திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பரான திசையன்விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் முருகானந்தம் (21) என்பவர், ரமேஷ் தலையில் இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக ரமேஷ் சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கொலை

ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பயங்கர கொலை குறித்து இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், தப்பி ஓடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகிறார். நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story