தம்பியை கழுத்தை இறுக்கி கொன்ற பிரியாணி மாஸ்டர்


தம்பியை கழுத்தை இறுக்கி கொன்ற பிரியாணி மாஸ்டர்
x
தம்பியை கழுத்தை இறுக்கி கொன்ற பிரியாணி மாஸ்டர்
தினத்தந்தி 27 Oct 2021 2:52 PM GMT (Updated: 27 Oct 2021 2:52 PM GMT)

தம்பியை கழுத்தை இறுக்கி கொன்ற பிரியாணி மாஸ்டர்

கோவை

கோவை தெற்கு உக்கடம் எஸ்.எச். காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). பிரியாணி மாஸ்டர். இவரது தம்பி முத்தாண் என்ற செல்வராஜ் (40). இறைச்சி கடையில் ஊழியரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் வேலைக்கு சென்று விட்டு தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வாடிக்கையாக இருந்துள்ளார். மேலும் அவரது அண்ணன் சுப்பிரமணியனிடமும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜ் குடிபோதையில் சுப்பிரமணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கும், செல்வராஜூக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, செல்வராஜை தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது. பின்னர் அருகில் கிடந்த நைலான் கயிற்றை எடுத்து செல்வராஜின் கழுத்தை இறுக்கினார். இதில் செல்வராஜ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து சுப்பிரமணி கொலையை மறைக்க, கோவை  சி.எம்.சி. காலனியில் உள்ள தனது சகோதரிக்கு போன் செய்து, செல்வராஜ் குடிபோதையில் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்த செல்வராஜின் கண் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் குடிபோதையில் தகராறு செய்த செல்வராஜை, அவரது அண்ணன் சுப்பிரமணி கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியை போலீசார் தேடினர். ஆனால் அதற்குள் அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளசுப்பிரமணியை தேடி வருகின்றனர்.

Next Story