பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்


பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 28 Oct 2021 5:51 PM GMT (Updated: 28 Oct 2021 5:51 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை (30-ந் தேதி) தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தடை உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை 30-ந் தேதி முத்துராமலிங்கத் தேவர் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரிடம் முன்அனுமதி பெற்று 5 நபர்களுக்கு மிகாமல் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் சார்பில் பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். 
ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவி டத்திற்கு வந்து செல்லவேண்டும். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். 
தடுப்புகள்
வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாச கங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்த கூடாது. மாவட்டத்தில் 186 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த வழிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 148 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவும் கண்டறியப்பட்டு அங்கு 900 தடுப்புகள் அமைத்து 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மாவட்டம் முழுவதும் வாடகை வாகனங்கள் மற்றும் அனுமதி பெறாமல் பசும்பொன் நோக்கி வரும் வாகனங்களை தணிக்கை செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 8 இணையவழி சோதனை சாவடிகள் உள்பட 39 தீவிர சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படும். சோதனை சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு
மேலும் கமுதி தனி ஆயுதப்படையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன் மற்றும் கமுதி உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முக்கிய இடங்களில் ஆளில்லா பறக்கும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. 
இதுதவிர விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாக னங்களை படம் பிடிக்க 80 கையடக்க வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 10 இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், 8 இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வாகனங்கள், அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ளும் பொருட்டு 16 ஆம்புலன்ஸ்கள், 18 தீயணைப்பு வாகனங்கள், காவலர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 நடமாடும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
10 ஆயிரம் பேர்
 கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மேற்பார்வையில், தென்மண்டல ஐ.ஜி, தலைமையில் 4 டி.ஐ.ஜிக்கள், 19 எஸ்.பிக்கள், 28 ஏ.டி.எஸ்.பி.க்கள், 70 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள், போலீசார் என 10 ஆயிரம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 53 வழித்தடங்களில் 4 சக்கர வாகனங்களிலும், 57 வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடஉள்ளனர். 
மாவட்டத்தில் 350 பேர் பிரச்சினைக்குரிய நபர்களை அடையாளம் காணப்பட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Next Story