திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை


திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 29 Oct 2021 7:58 PM GMT (Updated: 29 Oct 2021 7:58 PM GMT)

கரூர் வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி, அக்.30-
கரூர் வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் திருச்சி  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சியில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புரோக்கர்களிடம் விசாரணை நடத்தினர்.
வட்டார போக்குவரத்து அலுவலகம்
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பணம் மற்றும் பொருட்கள் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, சேவியர் ராணி மற்றும் போலீசார் திருச்சி பிராட்டிரில்  உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நேற்று மாலை அதிரடியாக நுழைந்தனர்.
ரூ.60 ஆயிரம் பறிமுதல்
பின்னர் அங்கு உள்ள ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 புரோக்கர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
கரூர் வட்ட வழங்கல் அலுவலகம்
இதேபோல் கரூர் ஜவகர்பஜார் சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் கரூர் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.   
தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் ரூ.2,920-க்கு ரசீது போடப்பட்டுள்ள நிலையில், ரூ.190 மட்டுமே கையிருப்பில் இருந்துள்ளது. மீதமுள்ள ரூ.2,730 பற்றாக்குறையாக இருந்தது குறித்து அலுவலகத்தில் இருந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இரவு 7 மணி அளவில் சோதனையை முடித்து கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story