கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 Nov 2021 7:25 PM GMT (Updated: 1 Nov 2021 7:25 PM GMT)

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 35). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆட்டுக்கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஆட்டு கொட்டகையை தொழிலதிபர் ஒருவர் இடித்து ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்ட குணசேகரனை தொழிலதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குணசேகரன் வரஞ்சரம் போலீசில்  புகார் கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த குணசேகரன் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்  கூட்டம் நடைபெற்ற கூட்டரங்குக்கு வெளியே தான் வைத்திருந்த மண்எண்ணெய் தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக  கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். .கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் போலீசார் மனு கொடுக்க வருபவர்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால் அதனையும் மீறி அந்த நபர் மண்எண்ணெய் எடுத்துச்சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story