தரமணியில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவர்


தரமணியில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவர்
x
தினத்தந்தி 4 Nov 2021 6:13 PM GMT (Updated: 4 Nov 2021 6:13 PM GMT)

தரமணியில் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த முதியவர் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

ஆலந்தூர்,

சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 67). இவரது மனைவி வேம்பாள் (66). இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் துரைசாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு துரைசாமிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை வேம்பாள் தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த துரைசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வேம்பாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

கைது

இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, வேம்பாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கியிருந்த துரைசாமியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story