அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை:கணவரிடம் செல்போனில் போலீசார் விசாரணை-வங்காள தேசத்தில் இருந்து சேலத்துக்கு அழைத்து வர நடவடிக்கை


அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை:கணவரிடம் செல்போனில் போலீசார் விசாரணை-வங்காள தேசத்தில் இருந்து சேலத்துக்கு அழைத்து வர நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2021 10:05 PM GMT (Updated: 15 Nov 2021 10:05 PM GMT)

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை குறித்து வங்காள தேசத்தில் உள்ள அவருடைய கணவரிடம் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரை சேலத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம்:
அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை குறித்து வங்காள தேசத்தில் உள்ள அவருடைய கணவரிடம் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரை சேலத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அழகு நிலைய உரிமையாளர்
வங்காள தேசத்தை சேர்ந்தவர் தேஜ்மண்டல் (வயது 27). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருடன் அவரது நண்பர்கள் லப்லு, ரிஷி ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி தேஜ்மண்டல் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரது உடல் சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்தது. 
இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்  தேஜ்மண்டலுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தை இருப்பது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-
கணவரிடம் விசாரணை
தேஜ்மண்டலுடன் இருந்த லப்லு, ரிஷி ஆகியோர் கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம். இந்த கொலை குறித்து வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அங்குள்ள அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையான தேஜ்மண்டலுக்கு திருமணமாகி முகமது ராக்கி என்ற கணவரும், 5 வயதில் ஒரு குழந்தை உள்ளதும் தெரியவந்தது. 
அவர்கள் தேஜ்மண்டலின் சொந்த ஊரான வங்காள தேசம் குமிளா மாகாணத்துக்குட்பட்ட போத்தாளி என்ற பகுதியில் உள்ளனர். இதையடுத்து முகமது ராக்கியை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி உள்ளோம். மேலும் அவரை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். மேலும் இந்த கொலை குறித்து தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story