படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது


படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 16 Nov 2021 12:03 PM GMT (Updated: 16 Nov 2021 12:03 PM GMT)

படப்பை அருகே 1½ ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

தொடர் கொள்ளை

படப்பை அருகே உள்ள மாடம்பாக்கம் ஆதனூர், குத்தனூர் ஆகிய பகுதிளில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெறறது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க முடியாமல் தொடர்ந்து போலீசார் திணறி வந்தனர்.

ரோந்து பணி

இந்நிலையில் ஆதனூர் பகுதியில் மணிமங்கலம் போலீசார் கடந்த 13-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மணிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் நைனார்பாத் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பதும், இவர் செங்கல்பட்டு மாவட்டம் மலையடி வேம்பாக்கம் பகுதியில் தன் குடும்பத்துடன் தங்கி மாமண்டூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வியாபாரத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு பஸ்சில் தனி ஆளாக சென்று ஆதனூர், மாடம்பாக்கம், குத்தனூர் ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளை பகலில் நோட்டமிட்டு, ஆயுதங்களைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் ஒன்றரை ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 50 பவுன் நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story