அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்


அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்
x
தினத்தந்தி 16 Nov 2021 5:29 PM GMT (Updated: 16 Nov 2021 5:29 PM GMT)

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை கடல் விழுங்கியதால், அங்குள்ள நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம், 
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை கடல் விழுங்கியதால், அங்குள்ள நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அரிச்சல்முனை
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை.  
அரிச்சல்முனைவரையிலும் சாலை அமைக்கப்பட்ட பின்னர் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூர பரப்பளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி விசாலமாக இருந்தது.
 சுற்றுலா பயணிகள் சாலை வளைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு மிக நீண்ட தூரம் வரையிலும் கடற்கரை மணல் பரப்பில் நடந்து சென்றும், ஓடி விளையாடி மகிழ்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்தனர். செல்போனிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கடல் விழுங்கிவிட்டது
இவ்வாறு மணல் பரப்பாக காணப்பட்ட தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைைய கிட்டத்தட்ட கடல் விழுங்கிவிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஏற்பட்ட கடல் நீரோட்ட வேகத்தால் கடல் நீரானது, மெல்ல மெல்ல மணல் பரப்பு பகுதியை ஆக்கிரமித்தது.
இந்தநிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் விந்தையால் கடல் நீரோட்டத்தின் வேகம் தொடர்ந்து அதிகமாகிக் ெகாண்டே வருகிறது.  இதனால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது. 
மீண்டும் உருவாகுமா?
இதனால் அரிச்சல்முனை கடற்கரை மணலில் இறங்கி நடந்து சென்று வேடிக்கை பார்க்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.  தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றி கடல் நீர் குறைந்து, மணல் பரப்பு மீண்டும் உருவாகுமா? என்பது சந்தேகம்தான். இருந்தாலும் நில அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு கடற்கரை மணல் பரப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story