தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Nov 2021 2:50 PM GMT (Updated: 20 Nov 2021 2:50 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் 27-வது வார்டு ஆசிரியர் காலனி-4 பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கடந்த ஒரு மாதமாக அள்ளப்படாமல் கிடக்கிறது. தற்போது, பெய்த மழையால் அதில் நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் இதுவரை குப்பைகள் அள்ளப்படவில்லை. எனவே, அந்த பகுதியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஜோன், டக்கரம்மாள்புரம்.

பஸ்கள் நின்று செல்லுமா?

நெல்லை அருகே உள்ள கானார்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நெல்லை-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் பஸ்களில் சென்று வருகிறார்கள். ஆனால், இந்த பஸ் நிறுத்தத்தில் 3 டவுன் பஸ்களை தவிர மற்ற பஸ்கள் நிற்பது இல்லை. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த வழியாக செல்லும் பல்வேறு பஸ்கள் கானார்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றால் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பிரவின்குமார், கானார்பட்டி. 

எரியாத மின்விளக்கு 

தென்காசி மாவட்டம் மேலகரம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு, மின்நகர், எழில்நகர், எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள தெருக்கள், குற்றாலம் செல்லும் மெயின் ரோடு ஆகியவற்றில் மின்விளக்குகள் பல வாரங்களாக எரியாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகிறார்கள். ஆகவே, மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
நடராஜன், மேலகரம்.

குரங்குகள் அட்டகாசம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. வீடுகளில் புகுந்து பொருட்களை தூக்கிச் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நாகராஜன், கழுகுமலை.

பாதையை ஆக்கிரமித்த முட்செடிகள் 

நாசரேத் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 2-வது கைலாசபுரம் தெருவில் இருந்து பிள்ளையன்மனை தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் முட்செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும், அந்த பாதை அருகில் உள்ள ஓடை பகுதியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் செல்ல முடியாமல் பாதை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
டேனியல்ராஜா, நாசரேத்.

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

திருச்செந்தூர் தெற்கு புது தெருவில் சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் பள்ளம் மூடப்பட்டாமல் அப்படியே உள்ளது. இதனால் அதில் ஆடுகள் தவறி விழுந்து உள்ளன. மேலும், குழந்தைகள் விளையாடும் பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் உள்ளது. எனவே, ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் இந்த ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மோகன சுந்தரம், திருச்செந்தூர்.

சாலையை சரிசெய்ய வேண்டும் 

விளாத்திகுளம் தாலுகா பெரியசாமிபுரத்தில் இருந்து இ.வேலாயுதபுரம் செல்லும் சாலையானது சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இந்த சாைல வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆகவே, இந்த சாலையை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.
யோவான்ராஜ், பெரியசாமிபுரம்.


Next Story