மின்னல் தாக்கி மீனவர் சாவு


மின்னல் தாக்கி மீனவர் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2021 7:54 PM GMT (Updated: 23 Nov 2021 7:54 PM GMT)

தேங்காப்பட்டணத்தில் கடலில் மீன்பிடிக்க சென்ற போது மின்னல் தாக்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை, 
தேங்காப்பட்டணத்தில் கடலில் மீன்பிடிக்க சென்ற போது மின்னல் தாக்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மீன்பிடிக்க சென்றனர்
தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம் சின்னத்துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பெஸ்லின் (வயது24), மீனவர். இவரும், இவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் துறைமுகத்தையொட்டி உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் எதிர்பாராத விதமாக படகில் மீன்பிடித்து கொண்டிருந்த அருள் பெஸ்லின் மீது மின்னல் தாக்கியது. அவர் உடல் கருகிய நிலையில் சுருண்டு விழுந்தார். இதை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
உடனே, அவர்கள் அருள்பெஸ்லினை மீட்டு அவசரம், அவசரமாக கரை திரும்பினர். பின்னர், அவரை ஆம்புலன்சு மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருள் பெஸ்லின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story