‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Nov 2021 5:38 AM GMT (Updated: 24 Nov 2021 5:38 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவு நீரை அகற்ற வேண்டும்



சென்னை சாந்தோமில் உள்ள முத்து தெருவில் கடந்த சில நாட்களுக்கு முந்தைய மழையில் இருந்தே, வெள்ள நீர் வடிய இடமின்றி தேங்குகிறது. மழை நீருடன், கழிவு நீரும் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் பண்ணையாக மாறிவிட்டது. மேலும் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

எஸ்.ரஜினி, சாந்தோம்.

புகார் பெட்டியால் அங்கன்வாடி மையத்துக்கு புத்துயிர்



திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் கிராமம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் பயன்பாடு இல்லாமல், புதர் மண்டி இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், ஊராட்சியும் உடனடி களப்பணியில் இறங்கியது. தற்போது அங்கன்வாடி மையம் புதுப்பொலிவுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

- அன்னை அஞ்சுகம் நகர் பொதுமக்கள்.

விரிசல் மின்கம்பம் உடனடி மாற்றம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம்  திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக் காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகளக்காட்டூர் கிராமம் பல்லக் காலனி 2-வது தெருவில் மின்கம்பம் விரிசல் அடைந்திருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விரிசல் அடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாய்ந்த மின்கம்பம் நேராக நிறுத்தப்பட்டது

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சி மின்சார வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள சீனிவாசநகரில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த மின்கம்பம் நேராக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குளம் கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்



சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, காட்டுப்பாக்கம், கோபரச நல்லூர் பிரதான சாலை அருகே இருக்கும் குளத்தில் குப்பைகளை கொட்டி அவலநிலையில் காட்சி அளிக்கிறது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் குளம், கழிவுநீர் தேங்கி இருக்கும் குட்டையாக மாறிவிட்டது. அதிகாரிகளின் பார்வை இதில் படுமா? நடவடிக்கை எடுப்பார்களா?

- பகுதி மக்கள்.

சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகள்

சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே இருக்கும் சாலையை மாடுகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாகன ஓட்டிகள்.

கொசுக்கள் தொல்லை

சென்னை ஆதம்பாக்கம், சக்திநகர், குறிஞ்சி தெருவில் கடந்த 15 நாட்களாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் தொல்லை அதிகமாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. குழந்தைகள் பலருக்கு இருமல், சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

- குறிஞ்சி தெரு மக்கள்.

பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கம் எதிரில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையின் மேற்கூரை சேதம் அடைந்தும், இருக்கைகள் உடைந்த நிலையிலும் மோசமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

- அ.அப்துல்காதர், பழைய வண்ணாரப்பேட்டை.

குப்பைக்கூளம் அகற்றப்படுமா?

சென்னை திரிசூலம் சக்திநகர் 9-வது வார்டில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது மழைக் காலமாக இருப்பதால், குப்பைகளை அகற்றுவதற்கு யாரும் வரவில்லை. இதனால் அந்த சாலை அகோரமாக காட்சியளிக்கிறது. உடனடியாக குப்பைக்கூளங்களை அகற்றித் தர புகார் பெட்டி மூலம் கோரிக்கை வைக்கிறோம்.

- சக்திநகர் பகுதி மக்கள்.

முகம் சுழிக்க வைக்கும் சாக்கடை

சென்னை பட்டினப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சாக்கடை கழிவுகள் கடந்த 2 மாதங்களாக அப்படியே இருக்கிறது. பலமுறை புகார் அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த வழியாக கடந்து செல்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் சாக்கடை கழிவுகள் இருக்கிறது. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.

சிதிலம் அடைந்து இருக்கும் பூங்கா



சென்னை கொடுங்கையூர், தென்றல் நகர் 4-வது தெருவில் இருக்கும் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இன்றி கடந்த 7 ஆண்டுகளாக சிதிலம் அடைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை பராமரித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

- தென்றல் நகர் பகுதி மக்கள்.

Next Story