மூட்டுவலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து 6 கிராம் தாலி காசுகள் திருட்டு


மூட்டுவலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி  தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து  6 கிராம் தாலி காசுகள் திருட்டு
x
தினத்தந்தி 24 Nov 2021 5:33 PM GMT (Updated: 24 Nov 2021 5:33 PM GMT)

மூட்டுவலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து 6 கிராம் தாலி காசுகளை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.

ஆவூர்:
தம்பதி
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). இவரது மனைவி செல்லம்மாள் (55). செல்லம்மாள் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முகவரி தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் லட்சுமணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பாராம். அப்போது அந்த நபரிடம் தம்பதியினர் இருவரும் தங்களுக்கு கை கால் மூட்டுவலி இருப்பதால் பெரும் சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர். 
இதைக் கேட்ட அந்த நபர் தான் ஒரு சித்த வைத்தியர் என்றும் உங்களுக்கு மூட்டுவலி சரியாவதற்கு மருந்து கொடுக்கிறேன் என்று நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமணன், செல்லம்மாள் ஆகிய இருவருக்கும் வேப்பிலை, எலுமிச்சம் பழம் கலந்த ஒரு கசாயத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த வயதான தம்பதியினர் இருவரும் மயக்கம் அடைந்துள்ளனர்.
6 கிராம் தாலி காசுகள் திருட்டு
 இதை பயன்படுத்தி செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடை கொண்ட தங்க தாலி காசுகளை அந்த மர்ம நபர் திருடிக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 10 மணி ஆகியும் தம்பதியினர் வெளியில் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அப்போதும் அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மயக்கம் தெளிந்த தம்பதிகள் நடந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதியிடம் மயக்கமருந்து கொடுத்து தங்கத் தாலி காசுகளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story