பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபயணம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபயணம்
x
தினத்தந்தி 24 Nov 2021 7:56 PM GMT (Updated: 24 Nov 2021 7:56 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகாசியில் தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ. உள்பட 350 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.

சிவகாசி, 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகாசியில் தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட  மாணிக்கம் தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ.  உள்பட 350 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர். 
நடைபயணம்
 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகாசி சிவன் கோவில் அருகில் இருந்து மக்கள் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. 
 இந்த நிலையில் சிவகாசி சிவன் கோவில் அருகில்  300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் திரண்டனர். அப்போது நடைபயணத்துக்கு அனுமதி இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி நடைபயணம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி  விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக் கம்தாகூர், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிவன் கோவில் அருகில் வந்தனர். 
பின்னர் முக்கிய பிரமுகர்கள் மட்டும் திறந்த ஜீப்பில் நின்ற படி மக்கள் மத்தியில் விலை வாசி உயர்வை கண்டித்து பேசினர். பின்னர் நடைபயணம் தொடங்கி யது. 
நடைபயணத்தில் மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாட்டு வண்டியை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஓட்டி வந்தார். அவருடன் மாணிக்கம்தாகூர் எம்.பி., மாவட்ட தலைவர் ஸ்ரீராஜாசொக்கர், மாநில நிர்வாகி மகேந்திரன், சேர்மக்கனி, நகர தலைவர் குமரன், ஒன்றிய கவுன்சிலர் ஜீ.பி.முருகன், பைபாஸ் வைரக்குமார் உள்பட 350-க்கும் மேற்பட்ட காங்கிரசார் நடந்து வந்தனர்.
கைது
சுமார் 50 மீட்டர் தூரம் மட்டும் இந்த நடைபயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ. அசோகன் உள்பட 350 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 பின்னர் அவர்களை அரசு பஸ்சில் ஏற்றி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அப்போது மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகாசியில் மக்கள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலில் போலீசார் அனுமதி அளித்தனர். பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இருந்தாலும் நாங்கள் மக்களோடு இருப்பதால் மக்கள் பிரச்சினைக்காக போராடினோம். எங்களை போலீசார் கைது செய்தனர். பட்டாசு தொழிலை காக்க நான் நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுவேன். அதே போல் சட்டமன்றத்தில் அசோகன் எம்.எல்.ஏ. பேசுவார். இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் உடன் இருந்தார்.

Next Story