மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் - மந்திரி ஆர்.அசோக் உறுதி


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் - மந்திரி ஆர்.அசோக் உறுதி
x
தினத்தந்தி 24 Nov 2021 9:13 PM GMT (Updated: 24 Nov 2021 9:13 PM GMT)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தொடர் கனமழை

  கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தலைநகர் பெங்களூரு உள்பட ஏராளமான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் நேற்று ஹாசன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மந்திரி ஆர்.அசோக் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் விவசாயிகளிடமும், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

  மேலும் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ராகிமரூர் கிராமத்தில் மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 லட்சத்திற்கும் மேற்பட்ட...

  ஹாசன் மாவட்டத்தில் 47 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்டங்களும் நாசமாகி உள்ளன. மாநிலத்தில் மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களும், தோட்டங்களும் நாசமாகி உள்ளன. மழையால் சேதமடைந்த விவசாய நிலங்கள், பயிர்களை வருவாய் துறை மற்றும் விவசாய துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பரிசீலித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். நிவாரண நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

  கர்நாடகத்தில் மழைப்பொழிவு இன்னும் முடிவடையவில்லை. சென்னையில் புயல் உருவானால் கண்டிப்பாக கர்நாடகத்தில் மீண்டும் தொடர் கனமழை பெய்யும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கடமை. நான் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று மழை சேதங்களை பார்வையிட்டு வருகிறேன்.

நிவாரண நிதி

  மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி இன்னும் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. அதை விடுவிக்கும்படி மாதந்தோறும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறேன். நிவாரண நிதியை அதிகரித்து வழங்கும்படியும் மத்திய அரசிடம் வலியுறுத்தி கடிதம் எழுதி இருக்கிறேன். இதுதொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். ரூ.300 கோடி நிவாரண நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. காபித்தோட்ட விவசாயிகளுக்கும் நிவாரண நிதி மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

  ஹாசன் மாவட்டத்தில் ரூ.33 கோடி அளவில் மழை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் ரூ.100 கோடிக்கும் மேல் சேதம் அடைந்திருக்க கூடும் என்று கருதுகிறேன். குறிப்பிட்ட பயிர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துவித பயிர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story