ஓசூர் சூளகிரி பகுதிகளில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்தது ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை


ஓசூர் சூளகிரி பகுதிகளில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்தது ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Nov 2021 4:57 AM GMT (Updated: 25 Nov 2021 4:57 AM GMT)

ஓசூர் சூளகிரி பகுதிகளில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஓசூர்:
ஓசூர், சூளகிரி பகுதிகளில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, பேரிகை, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தக்காளியை விவசாயிகள் பறித்து தினமும் சூளகிரியில் உள்ள மார்க்கெட் மற்றும் ஓசூர் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
இந்த பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து  ரகத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டுகளில் 23 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரகத்திற்கு ஏற்ப நேற்று முன்தினம் ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லரையாக ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை குறைந்தது
இந்தநிலையில் நேற்று ஓசூர் பத்தலப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு தக்காளியை வாங்கினர். ஒரு கிரேடு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லரையாக ரகத்திற்கு ஏற்பட ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நாசிக், பெல்காவி, தாவணகெரே போன்ற பகுதிகளில் இருந்து ஓசூருக்கு தக்காளி அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது. எனவே அதன் விலை சிறிது குறைந்துள்ளது. தற்போதுள்ள விலையே, குறைந்தது ஒரு மாத காலம் நீடிக்கும். தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

Next Story