போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி


போலி பணி நியமன ஆணை வழங்கி  மோசடி
x
தினத்தந்தி 25 Nov 2021 11:59 AM GMT (Updated: 25 Nov 2021 11:59 AM GMT)

போலி பணிநியமன ஆணை கொடுத்துமோசடி

திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 வாலிபர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
3 வாலிபர்கள் புகார்
திருப்பூர் நல்லூர் விஜயாபுரத்தை சேர்ந்த சூரியகுமார் வயது 25 பிரபாகரன் 25 பிரதீப்குமார் 24 ஆகியோர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழக அரசு முத்திரையுடன் திருப்பூர் கலெக்டர் வினீத் பெயரில் தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணையை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலக முத்திரையுடன் கலெக்டரின் நேர்முக உதவியாளர்  கடந்த 15ந் தேதி கையெழுத்துட்டு அந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஒவ்வொருவரிடம் தலா ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு பணிநியமன ஆணை தங்களுக்கு கடந்த 15ந் தேதி ஏழுமலை பெஞ்சமின் என்பவர் வழங்கியதாகவும், அவை போலி பணிநியமன ஆணை என்பது தெரிந்ததும் கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர். இதில் சூரியகுமார் ஐ.டி.ஐ. பிரபாகரன் மற்றும் பிரதீப்குமார் ஆகியோர் டிப்ளமோ படித்துள்ளனர்.
போலி பணி நியமன ஆணை
பின்னர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சாகுல் அமீதுவையும் சந்தித்து பேசினார்கள். இதுகுறித்து சூரியகுமார், பிரபாகரன், பிரதீப்குமார் ஆகியோர் கூறியதாவது
சென்னையை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமின் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ரூ.2 லட்சம் கொடுத்தால் வேலை பெற்றுக்கொடுப்பதாக கூறினார். இதை நம்பி அவர் அளித்த வங்கிக்கணக்கில் 3 பேரும் பணம் செலுத்தினோம். அதன்பிறகு கடந்த 15-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வருமாறு கூறினார். கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் எங்கள் சான்றிதழ்களை சரிபார்த்து பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்த அவர் பணிநியமன ஆணையை எங்களிடம் கொடுத்தார். அதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கையெழுத்திட்டு வழங்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு தான் கூறிய பின்னர் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தநிலையில் ராமநாதபுரத்தில் இதுபோல் போலி பணிநியமன ஆணை கொடுத்து ஏழுமலை பெஞ்சமினை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. அதன்பிறகே நாங்கள் ஏமாந்து போனது தெரிந்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அங்கு புறப்பட்டு சென்றனர்.
போலீஸ் கமிஷனர் விசாரணை
இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் கேட்டபோது, போலி பணிநியமன ஆணை தொடர்பாக 3 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மோசடி செய்த நபர், ஏற்கனவே ராமநாதபுரத்தில் 20 பேரிடம் இதுபோல் மோசடி செய்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

Next Story