தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்


தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 25 Nov 2021 1:52 PM GMT (Updated: 25 Nov 2021 1:52 PM GMT)

காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஊட்டி

காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மகசூல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பச்சை தேயிலையை பறித்து கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. கூட்டுறவு தொழிற்சாலைகளில் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலையை கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு வரத்து அதிகமாக இருந்தது.

தொடர் மழையால் தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கிறது. மகசூல் அதிகமாக இருந்தாலும் விலை கிலோ ரூ.14-க்கு கீழ் விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொப்புள நோய் தாக்குதல்

இதற்கிடையே ஊட்டி, மஞ்சூரில் மேகமூட்டம் மற்றும் கடும் பனிமூட்டம், தொடர் மழை போன்ற காலநிலை அடிக்கடி மாறி வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக வெயில் அடிப்பதை பார்க்க முடியவில்லை. காலநிலை மாற்றத்தால் தேயிலை தோட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. 

இலைகளில் வெள்ளை நிறத்தில் கொப்புளம் போன்று உருவாகிறது. பின்னர் அந்த இலை முற்றிலும் காய்ந்து விடுகிறது. இந்த நோய் தாக்குவதால் தேயிலை செடிகளில் இலைகள் கருகி வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் குறையும் நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

காலநிலை மாற்றம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தபோது மகசூலும் அதிகரித்து காணப்பட்டது. தற்போது அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றங்களால் தேயிலை செடிகளை கொப்புள நோய் பரவலாக தாக்கி வருகிறது. 

இதனால் தேயிலை செடிகள் கருகுவதால், அதனை விற்பனைக்காக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால், செடிகளை நோயில் இருந்து பாதுகாக்க அதிக விலைக்கு மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story