ஓட்டேரி ஏரியில் படகுவிட்டு சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை


ஓட்டேரி ஏரியில் படகுவிட்டு சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2021 6:26 PM GMT (Updated: 25 Nov 2021 6:26 PM GMT)

ஓட்டேரி ஏரியில் படகுவிட்டு சுற்றுலா மையமாக மாற்றுவது குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வேலூர்

ஓட்டேரி ஏரியில் படகுவிட்டு சுற்றுலா மையமாக மாற்றுவது குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுற்றுலா மையம்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் நேற்று ஓட்டோரி ஏரியை ஆய்வு செய்தனர். அப்போது ஏரியின் கரைப்பகுதி பலமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சில இடங்களில் சேதமடைந்த நிலையில் இருந்த ஏரிக்கரையை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியை தொடங்கினர். மேலும் ஏரியில் படகு விட்டு சுற்றுலா மையமாக மாற்றுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இதையடுத்து விருப்பாட்சிபுரம் கெங்கை அம்மன் கோவில் குளத்தை ஆய்வு செய்தனர். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ளவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டார். சேனாதிபதி முதலியார் தெருவில் ஆய்வு மேற்கொண்டு சாலை சேதமடைந்த நிலையில் இருந்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து சிவில் சப்ளை குடோன் பகுதியில் உள்ள பொதுமக்கள் சுடுகாட்டு பாதை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அங்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏரிகளை புனரமைக்க

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5 குளங்கள், சாலைகள் தரம் குறித்து எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறு, சிறு குறைபாடுகள் உள்ளதால் அதை நிவர்த்தி செய்ய சொல்லி இருக்கிறோம். 3 நாட்களில் அந்த பணிகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏரிகளை புனரமைக்க சில திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. எம்.எல்.ஏ. முயற்சியால் முதல் அமைச்சரிடம் கூறி சிறப்பு நிதி வாங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும். குப்பைகளை ஏரி, ஆறு உள்பட நீர்நிலைகளில் கொட்டக்கூடாது. நாங்கள் ஆய்வு செய்த நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டி இருந்தார்கள். இவற்றை உடனடியாக அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story