குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:06 PM GMT (Updated: 25 Nov 2021 8:06 PM GMT)

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவனூர் ஊராட்சி கல்வெட்டு கிராம பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்து மூன்று மாதங்கள் ஆன பிறகும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று காலை 9 மணி அளவில் ஆண்டிமடம்- வாரியங்காவல் சாலையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் வராததால் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். மழைக்காலத்தில் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது, என்று தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்நிலையில் மறியல் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், ஊராட்சி தலைவர் விசாலாட்சி சிவக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமரசம் ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.

Next Story