ஓட்டை பிரித்து கடையில் பணம்- பொருட்கள் திருட்டு


ஓட்டை பிரித்து கடையில் பணம்- பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 25 Nov 2021 8:12 PM GMT (Updated: 25 Nov 2021 8:12 PM GMT)

ஓட்டை பிரித்து கடையில் பணம்- பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் இடங்கண்ணி பிரிவு சாலையில், தாதம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த பகவத்சிங்கின் மகன் சத்தியமூர்த்தி என்பவர் ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை மீண்டும் கடையை திறந்து பார்த்தபோது பொருட்கள் கலைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த சிறிய அளவிலான பணம் எடுக்கும் எந்திரம், தொலைபேசி, சுமார் ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் மேற்கூரை ஓடுகளை பிரித்து, அதன் வழியாக மர்ம நபர்கள் கடைக்குள் இறங்கி திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளை தடயவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சத்யராஜ் பதிவு செய்தார். இது குறித்து தா.பழூர் போலீசில் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story