ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 8:31 PM GMT (Updated: 25 Nov 2021 8:31 PM GMT)

தென்காசியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி:
தென்காசியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள்

தென்காசியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தென்காசி அணைக்கரை தெரு பகுதியில் ஒரு மினி லாரியில் இருந்து மற்றொரு மினி லாரிக்கு இவற்றை மாற்றி கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு 2 பேர் தடை செய்யப்பட்ட இந்த பொருட்களை மாற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள், மினி லாரியில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மற்றும் 2 மினி லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், திருப்பத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அமரேஷ் (வயது 33) என்பதும், மற்றொருவர் தென்காசி அணைக்கரை தெருவைச் சேர்ந்த மங்கணராம் என்பவர் மகன் ரமேஷ் பட்டேல் (19) என்பதும் தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து இந்த பொருட்களை அத்திப்பட்டி என்ற இடத்தில் பெற்று அங்கிருந்து தென்காசிக்கு கொண்டுவந்து அமரேஷ் வாகனத்தில் இருந்து ரமேஷ் பட்டேல் வாகனத்திற்கு மாற்றும்போது போலீசார் பிடித்தனர். கைதான 2 பேரும் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story