கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்துக்குள் லாரிகளை அனுமதிக்க முடியுமா? ஐகோர்ட்டு கேள்வி


கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்துக்குள் லாரிகளை அனுமதிக்க முடியுமா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 26 Nov 2021 9:03 PM GMT (Updated: 27 Nov 2021 5:57 AM GMT)

விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் உள்ள தக்காளி மைதானத்துக்குள் லாரிகளை அனுமதிக்க முடியுமா என்பது குறித்து வருகிற 29-ந் தேதி சி.எம்.டி.ஏ., கோயம்பேடு மார்கெட் கமிட்டி ஆகியவை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் மார்க்கெட்டை திறந்தபோது, தக்காளியை லாரியில் இருந்து இறக்கும் ‘தக்காளி கிரவுண்டு' என்ற தக்காளி மைதானத்தை மட்டும் திறக்கவில்லை. இந்த மைதானம்தான் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமான இடம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த மைதானத்தை திறக்கக்கோரி தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்கக்கோரி மனுதாரர் தரப்பு வக்கீல் சிவா நேற்று முன்தினம் முறையிட்டார்.

சிறு வியாபாரிகள்

அப்போது, தக்காளி கிரவுண்டு திறக்கப்பட்டால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை கொண்டு வந்து ஒரு கிலோ தக்காளியை ரூ.40-க்கு விற்பனை செய்ய முடியும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு எடுத்தார்.

அப்போது, மனுதாரர் வக்கீல் சிவா ஆஜராகி, கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரத்து 200 சதுர அடி, 2 ஆயிரத்து 400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது. 150 முதல் 600 சதுர அடி வரையுள்ள கடைகளை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் இந்த தக்காளி மைதானத்தைத்தான் பயன்படுத்தினர்’ என்று வாதிட்டார்.

அனுமதிக்க முடியுமா?

சி.எம்.டி.ஏ. தரப்பில் ஆஜரான வக்கீல், லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதி சரியானதுதான். இருந்தாலும் தற்போது தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, சிறு வியாபாரிகள் இணைந்து லாரிகளில் தக்காளியை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவைத்து சரக்கை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

பதில் அளிக்க வேண்டும்

பின்னர், தக்காளி விலை குறையும்வரை ஓரிரு வாரங்களுக்கு தக்காளி மைதானத்தில் லாரிகளை நிறுத்திக்கொள்ள அனுமதிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,), கோயம்பேடு மார்கெட் கமிட்டி நிர்வாகம் ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 29-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Next Story