சாலையில் தேங்கும் மழைநீர்


சாலையில் தேங்கும் மழைநீர்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:34 PM GMT (Updated: 26 Nov 2021 9:34 PM GMT)

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்
தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த செங்கிப்பட்டி மெயின் ரோடு அருகே உள்ள வடக்கு தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர் வழியாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கதிரேசன், செங்கிப்பட்டி.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதி சந்தைப்பேட்டை பள்ளி அருகே உள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசகிறது. மேலும், மழைக்காலங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி குப்பைகளில் இரை தேடி வரும் நாய்கள், பன்றிகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-முகமது, மதுக்கூர்.

தஞ்சை பரிசுத்தம் நகர் பகுதியில் உள்ள மெயின் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குப்பைத்தொட்டி சேதமடைந்துள்ளதால் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகள் சிதறி சாலையில் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகினறனர். எனவே, சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்றுவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள குப்பைத்தொட்டியை சாலையோரத்தில் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பரிசுத்தம்நகர்.

Next Story