மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:31 AM GMT (Updated: 29 Nov 2021 8:31 AM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

ஆட்டையாம்பட்டி, நவ.29-
வீரபாண்டியில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள். பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் காட்டு வளவை சேர்ந்தவர் சந்தோசம் என்கிற முருகேசன் (வயது 45). இவர் நேற்று தனது மனைவி லலிதாவுடன் (40) பாலம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 
வீரபாண்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வளைவு பாதையில் எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளுடன், சந்தோசம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதியது. 
இந்த விபத்தில் சந்தோசம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேேய பலியானார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த அவருடைய மனைவி லலிதா பலத்த காயத்துடன் சீரகாபாடி உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வீரபாண்டி ராஜ வீதியை சேர்ந்த ஸ்ரீதர் (25) பலத்த காயத்துடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். 
என்ஜினீயர் பலி
இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி வழக்குப்பதிவு விசாரணை செய்தார். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
விபத்தில் இறந்த ஸ்ரீதர் என்ஜினீயர் ஆவார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில், என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story