வெள்ளத்தில் சிக்கி மாயமான பள்ளி மாணவி பிணமாக மீட்பு


வெள்ளத்தில் சிக்கி மாயமான பள்ளி மாணவி பிணமாக மீட்பு
x

வெள்ளத்தில் சிக்கி மாயமான 8-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்கப்பட்டாள்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுடைய மகள் யூட்டிகா (வயது 13). இவள், செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டில் இருந்த யூட்டிகா, தனது தோழிகளுடன் மழைநீர் வெளியேறுவதை வேடிக்கை பார்க்க சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றாள். அங்கு ரெட்டிப்பாளையம் மதகில் இருந்து விவசாயத்துக்கு பாய்ந்தோடிய வெள்ளத்தில் யூட்டிகா அடித்துச் செல்லப்பட்டாள்.

பிணமாக மீட்பு

மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு பனை மரத்தின் கீழேயுள்ள கல்லின் இடையே யூட்டிகா பிணமாக கிடந்தாள்.

போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story