தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 2 Dec 2021 12:54 PM GMT (Updated: 2 Dec 2021 12:54 PM GMT)

விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் கந்துவட்டி கொடுமையால் இறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள தெளி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி மகன் ஜெயராமன் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி பாக்யலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஜெயராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. 
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் பாக்யலட்சுமி, தனது கணவர் ஜெயராமனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீடான மழவந்தாங்கல் கிராமத்திற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயராமன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்துவட்டி கொடுமை?

இதனிடையே கந்து வட்டி கொடுமையால்தான் ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டதாக ஊர் முழுக்க தகவல் பரவியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story