ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தேவையான வசதி


ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தேவையான வசதி
x
தினத்தந்தி 3 Dec 2021 7:35 PM GMT (Updated: 3 Dec 2021 7:35 PM GMT)

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர், 
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் அமைச்சர்  கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
 விருதுநகர் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதிகள் ஆகியவற்றை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வின்போது திராவிட நலத்துறை ஆணையர் மதுமதி, கலெக்டர் மேகநாத ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் இடவசதி மற்றும் அவருக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நல்ல பெயர் 
 மேலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் கட்டிட உறுதிதன்மை, கழிவறை வசதி மற்றும் பிறவசதி ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேவையான வசதிகள் செய்து தர அறிவுறுத்தப்பட்டது.
 அரசு விடுதிகளில் மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கும் மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு விடுதிகள் மற்றும் பள்ளிக்கு அருகிலேயே மருத்துவவசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதிகளை நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி அரசிற்கும், பெற்றோருக்கும் நல்ல பெயர் பெற்று தரவேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின் போது  சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், ராஜபாளையம் யூனியன்துணை தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முத்துச்செல்வி மற்றும் பலர் உடனிருந்தனர். 
மாணவர் விடுதியில் ஆய்வு 
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-  கல்வி சார்ந்த திட்டங்களுக்கு தமிழக அரசு 85 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. எனவே மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம்.  சேதம் அடைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story