ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 9:50 PM GMT (Updated: 4 Dec 2021 7:58 AM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Next Story