விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 1:19 PM GMT (Updated: 4 Dec 2021 1:19 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி (நாளை) ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாத வண்ணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அனைத்து இடங்களிலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர வாகன சோதனை

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

பஸ், ரெயில் நிலையங்களில்...

மேலும் பஸ் நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும், தீவிர சோதனை செய்தனர். அதேபோல் ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடந்தது. ரெயில் நிலைய நுழைவுவாயிலில் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் மற்றும் மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் வந்து சென்ற சோழன், வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன், ஏட்டுகள் ரங்கபாஷியம், மணிகண்டன், தனிப்பிரிவு ரவி, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டு ரவிச்சந்திரன் ஆகியோர் ஒவ்வொரு பெட்டியாக சென்று தீவிர சோதனை செய்தனர். அதேபோல் ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கடைவீதிகள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story