தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 4 Dec 2021 5:46 PM GMT (Updated: 4 Dec 2021 5:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலூரில் பாதாள சாக்கடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் இணைப்பு இன்னும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. உபயோகத்திற்கு முன்பே கழிவு நீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள் என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அவற்றை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
தயாநிதி, ஸ்ரீரங்கம் திருச்சி.

சாலையில் தேங்கும் மழைநீர் 
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை நான்கு ரோடு சந்திப்பில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் வேகமாக வாகனங்கள் செல்லும்போது சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் தெறிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதினால் சாலை பழுதடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சிவசுப்ரமணியன், தென்னிலை, கரூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியை சேர்ந்த 6-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் போது இவற்றில் மழைநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கலைமணி, ஜெயங்கொண்டம், அரியலூர். 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, தீயத்தூர் ஊராட்சியை சேர்ந்த வேலிமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைபெய்யும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதினால் பள்ளத்தில் அளவு தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அவற்றில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கெள்கிறோம். 
ரமேஷ், வேலிமங்கலம், புதுக்கோட்டை. 
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் இருந்து முத்துசேர்வாமடம் சாலையில் அமைந்துள்ளது பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து பள்ளியின் நுழைவு வாயில் வரை சேறும், சகதியுமாக உள்ளதால் மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி சென்று வருகின்றனர். உடனடியாக அந்த சாலையில் இருந்து நுழைவாயில் வரை செல்லும் வழியில் உடனடியாக தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கந்தவேல், மீன்சுருட்டி, அரியலூர். 

தரைப்பாலம் அமைக்க வேண்டும்
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தின் எல்லையில் சிறுவாச்சூருக்கு செல்லும் சாலையின் இடையே ஓடை உள்ளது. ஆனால் ஓடையில் தண்ணீர் செல்வதற்கு வசதியாக அந்த சாலையில் தரைப்பாலம் அமைக்கப்படாமல் சறுக்கு போல் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையினால் அந்த சாலையை மூழ்கியபடி ஓடை தண்ணீர் செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலை வழியாக சிறுவாச்சூருக்கும், பெரம்பலூருக்கும் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் ஓடை தண்ணீர் செல்வதற்கு வசதியாக தரைப்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விளாமுத்தூர், பெரம்பலூர்.

சாலையில் திரியும் ஆட்டுக்குட்டி, கோழிகளை கடித்து குதறும் நாய்கள் 
திருச்சி செந்தண்ணீர்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றது. வீடுகளில் கிடைக்கும் பொருட்களை கவ்விச்செல்வது வழக்கமாக நடக்கிறது. பள்ளி சென்று வரும் மாணவ-மாணவிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றது. இரவு நேரங்களில் பணிகளுக்கு சென்றுவிட் டு தங்களின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கண்டால் பாய்ந்து சென்று கடிக்கின்றது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.  மேலும் சாலைகளில் சுற்றி திரியும் கோழி மற்றும் ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறி நடுரோட்டில் போட்டு விடுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செந்தண்ணீர்புரம், திருச்சி. 
திருச்சி மாநகராட்சி 10-வது வார்டு சங்கரன்பிள்ளை சாலையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க வருகிறது. மேலும்  சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் பொதுமக்களும், குழந்தைகளும் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஈஸ்வரன், சங்கரன்பிள்ளை, திருச்சி.

தெப்பக்குளத்தில் தேங்கும் குப்பைகள்
திருச்சி மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக மலைக்கோட்டை தெப்பக்குளம் நிரம்பி காணப்பட்டது. ஆனால் மழைபெய்யும்போது நீர் வரத்து பகுதிகளில் கிடந்த குப்பைகள் அனைத்தும் அடித்துவரப்பட்டு தெப்பக்குளத்தில் தேங்கி நிற்கின்றன.  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்து நீரில் குப்பைகள் தேங்கி நிற்பதினால் நீர்அசுத்தமாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மலைக்கோட்டை, திருச்சி.

கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமா? 
திருச்சி வெங்கடேஸ்வரா நகர், ஐஸ்வர்யா எஸ்டேட், ரன்வேநகர், ஜே.கே.நகர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் காலி மனைகளில் தேங்கி நிற்கின்றன.  மேலும் இவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வெங்கடேஸ்வரா நகர், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி-திண்டுக்கல் சாலை தற்போது பெய்த மழையினால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் செல்லும்போது முன்புறம் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து வருகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

பழுதடைந்த பாதாள சாக்கடை மூடி
திருச்சி கிழக்கு தொகுதி 22-வது வார்டுக்கு உட்பட்ட பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியில் பாதாள சாக்கடை  அமைக்கப்பட்டுள்ளது. இதில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் இரும்பு மூடி துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து பாதாள சாக்கடையில் விழும் நிலையில் உள்ளது. வாகனங்கள் இந்த இரும்பு மூடியில் ஏறி இறங்கும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மூடியை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தர்மநாதபுரம், திருச்சி. 


Next Story