மயான பாதையை மீட்டு தரக்கோரி சாலை மறியல்- தாசில்தார் கார் மறிப்பு


மயான பாதையை மீட்டு தரக்கோரி சாலை மறியல்- தாசில்தார் கார் மறிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 8:08 PM GMT (Updated: 4 Dec 2021 8:08 PM GMT)

மயான பாதையை மீட்டு தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், தாசில்தார் காரை மறித்தனர்.

மங்களமேடு:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை கிராமத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் மயானத்திற்கு செல்வதற்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டு, பெட்ரோல் விற்பனை நிலையம் கட்டப்படுவதாக கூறி அதை கண்டித்தும், மயானப் பாதையை மீட்டுத்தர கோரியும் அகரம் சீகூர் - பெரம்பலூர் சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த குன்னம் தாசில்தார் காரையும் வழிமறித்தனர். இந்நிலையில் அங்கு போலீசாரும் வந்தனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய தாசில்தார் அனிதா, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வு காணப்படும், என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பாதையை மீட்க வேண்டும்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் சகோதரியுமான சுந்தராம்பாள் கூறுகையில், 1,910-ம் ஆண்டு முதல் இந்த பாதையை 5 தலைமுறையாக ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மலர்வண்ணன் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது மயான பாதையை பட்டா பெற்றுக்கொண்டார்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டுத்தர வேண்டும், என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் கூறுகையில், மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் போராட்டம் நடைபெறும், என்றார்.
பட்டா உள்ளது
இது பற்றி அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மலர்வண்ணனிடம் கேட்டபோது, பெட்ரோல் விற்பனை நிலைய கட்டிட பணி நடைபெறும் இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்திற்கான பட்டா தங்களிடம் உள்ளது என்றும், அதன் அடிப்படையிலேயே அங்கு கட்டிட பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story