கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2021 12:24 AM GMT (Updated: 6 Dec 2021 12:24 AM GMT)

கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், சதானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆம்புரூஸ் மார்டின். இவருடைய மகன் மேத்யூ ஆம்புரூஸ் (வயது 14). இவர், ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த மேத்யூ ஆம்புரூஸ், தான் பள்ளியில் நடந்த கணக்கு தேர்வை சரியாக எழுதவில்லை என பெற்றோரிடம் கூறி புலம்பியதாகவும், அதற்கு பெற்றோர், கவலைப்படவேண்டாம் என மகனுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்து வைத்ததாகவும் தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தேர்வுக்காக படிக்க செல்வதாக கூறி சென்ற மேத்யூ ஆம்புரூஸ், நீண்ட நேரமாகியும் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மாடிக்கு சென்று பார்த்தனர். கதவு உள்புறமாக பூட்டி இருந்தது.

நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அறையில் தங்கள் மகன் மேத்யூ ஆம்புரூஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார், மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story