பேரண்டூரில் டிராக்டர் மூலம் குளோரின் கலந்த குடிநீர் வினியோகம்


பேரண்டூரில் டிராக்டர் மூலம் குளோரின் கலந்த குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 6 Dec 2021 2:46 PM GMT (Updated: 6 Dec 2021 2:46 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு டிராக்டர் மூலம் குளோரின் கலந்த குடிநீர் வீடுகளுக்கு வினியோகப்படுகிறது.

வாந்தி, மயக்கம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 22 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, மற்றும் லட்சிவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளோரின் கலந்த குடிநீர்

விசாரணையில், தேங்கி நின்ற மழை வெள்ளம் கலந்த நீரை பருகியதால் 22 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று குளத்து பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டது.இதற்கு பதிலாக குளோரின் கலந்த குடிநீர் டிராக்டர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பரிசோதனை மாதிரிகள், மலம் பரிசோதனை மாதிரிகள், ரத்த மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆறுதல்

இந்தநிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பழரசம், பிஸ்கட், ரொட்டி ஆகிய பொருட்களை வழங்கினார். அப்போது, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.


Next Story