திருவல்லிக்கேணியில் பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த சாக்லெட், முந்திரி பார்சல் வெடிகுண்டு பீதியால் பரபரப்பு


திருவல்லிக்கேணியில் பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த சாக்லெட், முந்திரி பார்சல் வெடிகுண்டு பீதியால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 12:27 AM GMT (Updated: 7 Dec 2021 12:27 AM GMT)

சென்னை திருவல்லிக்கேணியில் பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த சாக்லெட், முந்திரி பருப்பு பார்சலால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு நேற்று முன்தினம் இரவு பார்சல் ஒன்றை நபர் ஒருவர் கொண்டு வந்தார். அந்த பார்சல், ‘பரிசு பார்சல்’ என்றும், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியிடம்தான் கொடுப்பேன் என்றும் அந்த நபர் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல், உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி அந்த பார்சல் தனக்கு வந்தது இல்லை என்று வாங்க மறுத்துவிட்டார்.

வெடிகுண்டு பீதி

இதனால் அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. அது வெடிகுண்டு பார்சலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வந்து பார்சலை மோப்ப நாய் உதவியுடன் எடுத்துச்சென்றனர். கலைவாணர் அரங்கம் பின்புறம் உள்ள மைதானத்தில் வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை பிரித்து பார்த்தனர்.

அப்போது அது வெடிகுண்டு பார்சல் இல்லை என்று தெரிய வந்தது.அது உண்மையிலேயே பரிசு பார்சல். அதற்குள் முந்திரி பருப்பு, பாதாம், திராட்சை மற்றும் சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தன. வெடிகுண்டு பார்சல் என்று பெரும் பீதியை ஏற்படுத்திய பார்சல், பரிசு பார்சலாக அனைவர் நெஞ்சிலும் பால் வார்த்தது. வெடிகுண்டு பரபரப்பும் அடங்கிவிட்டது.

போலீஸ் விசாரணை

தற்போது அந்த பார்சலை கொண்டு வந்த நபர் யார்? என்று போலீசார் அடுத்த விசாரணையை தொடங்கி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வாயிலாக இதுபற்றி போலீசார் துப்பறிந்து வருகிறார்கள்.

சென்னை போலீஸ் வட்டாரத்தில் அரங்கேற்றப்பட்ட காமெடி காட்சியாக இது சிரிப்பாக பேசப்படுகிறது.

Next Story