டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருட்டு


டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:58 PM GMT (Updated: 7 Dec 2021 7:58 PM GMT)

மதுரையில் டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை, 
மதுரையில் டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர் வீடு
மதுரை கூடல்நகர் சொக்கலிங்க நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சேகரன் (வயது 65). ஓய்வு பெற்ற மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தற்போது அவர் கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் உள்ள அனைவரும் கதவை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.
பின்னர் மாலை சேகரன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.
அதிர்ச்சி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீ சாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு என மொத்தம் 17½ பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது கதவை பூட்டி பின்பக்கம் உள்ள ஜன்னலை திறந்து உள்ளே மறைவாக சாவியை வைத்து செல்வது வழக்கம். அதை யாரோ மர்மநபர்கள் கண்காணித்து வந்து, சம்பவத் தன்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
விசாரணை
மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மதுரையில் பட்டப்பகலில் டாக்டர் வீட்டில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story