குமரி வாலிபரை கரம்பிடித்த இளம்பெண்


குமரி வாலிபரை கரம்பிடித்த இளம்பெண்
x
தினத்தந்தி 8 Dec 2021 7:51 PM GMT (Updated: 8 Dec 2021 7:51 PM GMT)

ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட காதலால், சென்னையில் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் ஒருவர் கரம்பிடித்தார்.

திங்கள்சந்தை:
ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட காதலால், சென்னையில் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் ஒருவர் கரம்பிடித்தார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;- 
இளம்பெண் மாயம்
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகள் ராஜலெட்சுமி (வயது 30). இவருக்கும், சென்னை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமண ஏற்பாடு நடந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி கடைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வாலிபருடன் போலீஸ்   நிலையத்தில்...
மேலும் ராஜலட்சுமியின் பெற்றோர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜலட்சுமியை தேடி வந்தனர். இதற்கிடையே ராஜலட்சுமியின் சகோதரர் சங்கரநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 
இதனை தொடர்ந்து போலீசார் ராஜலட்சுமியின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர். அப்போது அவர் கேரள பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் போலீசார் நெருங்குவதை அறிந்த ராஜலட்சுமி, வாலிபர் ஒருவருடன் குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
ஆன்லைன் விளையாட்டு காதல்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் பிரீபையர் கேம் விளையாடுவதில் ராஜலட்சுமி ஆர்வமிக்கவராம். அதில் விளையாடும் போது 3 மாதத்துக்கு முன்பு குமரி மாவட்டம் அருமனை காரோடு பகுதியை சேர்ந்த மேத்யூ ஜாண் (29) என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.
இந்த காதலை அவரால் மறக்க முடியவில்லை. இதனால் அவர் வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை உதற முடிவு செய்தார்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ராஜலட்சுமி, கேரள மாநிலம் மூணாறில் உள்ள கோவிலில் மேத்யூ ஜாணை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் காதல் ஜோடி அருமனை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும் தெரியவந்தது. மேத்யூ ஜாண் கேரளாவில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சேர்ந்து வாழ்வதில்...
பின்னர் போலீசார் இருவீட்டு குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதல் ஜோடி இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். தொடர்ந்து அவர்களை வாழ்த்தி போலீசார் அனுப்பி வைத்தனர். ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பழக்கத்தில் உருவான காதலால், சென்னையில் வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. 


Next Story