காட்டுப்பன்றி கடித்து முதியவர் படுகாயம்


காட்டுப்பன்றி கடித்து முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Dec 2021 6:50 PM GMT (Updated: 10 Dec 2021 6:50 PM GMT)

காரியாபட்டி அருேக காட்டுப்பன்றி கடித்து முதியவர் படுகாயம் அடைந்தார்.

காரியாபட்டி, 
காரியாபட்டி அருேக காட்டுப்பன்றி கடித்து முதியவர் படுகாயம் அடைந்தார். 
காட்டுப்பன்றி 
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி  ஆகிய பகுதிகளில் தற்போது மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், கடலை, வெங்காயம், மக்காச்சோளம் உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். 
இந்த பகுதியில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளால் ஏனைய கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. காரியாபட்டி தாலுகா, முடுக்கன்குளம் ஊராட்சி, சிறுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமன் (வயது 65). இவர் முடுக்கன்குளம் அருகே உள்ள கீழ புதுப்பட்டி பகுதியில் உள்ள காட்டில் கடலை பயிரிட்டுள்ளார்.
விவசாயி படுகாயம் 
இந்த பகுதியில் கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் தினமும் சேதப்படுத்தி வருவதால் பயிர்களை பாதுகாப்பதற்காக முத்துராமன் காட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை முத்துராமன் காட்டில் இருந்தபோது காட்டுப்பன்றிகள் வந்துள்ளன.  இதை விரட்ட முற்படும்போது காட்டுப்பன்றிகள் முத்துராமனை காலில் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். அப்போது பன்றிகள் அங்கிருந்து சென்று விட்டன.  இதையடுத்து படுகாயமடைந்த முத்துராமனை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-  காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் நாங்கள் எதிர்பார்த்த மகசூல் பெற முடியவில்லை. தற்போது ஒரு விவசாயியை கடித்து படுகாயப்படுத்தி விட்டது. இதேநிலைமை தான் மாவட்டம் முழுவதும் நிலவுகிறது.  எனவே காட்டுப்பன்றிகளை ஒழிக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story