செங்குன்றம் அருகே பரிதாபம் வாகனம் மோதி தந்தை-மகன் சாவு


செங்குன்றம் அருகே பரிதாபம் வாகனம் மோதி தந்தை-மகன் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2021 12:13 AM GMT (Updated: 14 Dec 2021 12:13 AM GMT)

செங்குன்றம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தந்தை-மகன் பலியானார்கள்.

செங்குன்றம்,

ஆந்திர மாநிலம் வெங்கடகிரியை சேர்ந்தவர் முனிசுந்தரம்(வயது 35). இவர், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை முனிசுந்தரம், தனது 6 வயது மகன் சசிவரதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்னீர்குப்பத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வாகனம் மோதி பலி

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முனிசுந்தரம், அவருடைய மகன் சசிவரதன் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தந்தை, மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story