கேலி கிண்டல் செய்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


கேலி கிண்டல் செய்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2021 9:09 PM GMT (Updated: 21 Dec 2021 9:09 PM GMT)

சித்ரதுர்கா மாவட்டத்தில், கேலி, கிண்டல் செய்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை கேலி, கிண்டல் செய்த வாலிபர்களை கைது செய்யக்கோரி பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு:

கல்லூரி மாணவி

  சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா சீரனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் ராதிகா(வயது 17). மைனர் பெண்ணான இவர் சித்ரதுர்கா டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அவ்வாறு இவர் தினமும் வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த மாதப்பா, சுதீப், கோட்டி, அபி ஆகிய 4 வாலிபர்களும் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்த கொடுமை தினமும் அரங்கேறி இருக்கிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு ராதிகா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மாதப்பா உள்ளிட்ட 4 பேரும், ராதிகாவை கேலி, கிண்டல் செய்ததுடன் அவரது ஜடையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் மானபங்கமும் செய்திருந்தனர்.

தற்கொலை

  இதனால் மனமுடைந்து கதறி அழுத ராதிகா இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் மாதப்பா உள்ளிட்ட 4 பேரையும் கண்டித்தனர். இருப்பினும் மனமுடைந்து காணப்பட்ட ராதிகா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர், தூக்கில் ராதிகா பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுத அவர்கள் இதுபற்றி ஒசதுர்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

பரபரப்பு

  இதற்கிடையே ராதிகாவின் தற்கொலைக்கு மாதப்பா, கோட்டி, அபி, சுதீப் ஆகிய 4 பேர் தான் காரணம் என்றும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று ஒசதுர்கா போலீஸ் நிலையம் முன்பு ராதிகாவின் பெற்றோரும், அவரது உறவினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுபற்றி அறிந்த போலீஸ் அதிகாரிகாரிகள், விரைந்து வந்து ராதிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாதப்பா உள்ளிட்ட 4 பேரையும் விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story