கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2021 12:10 AM GMT (Updated: 22 Dec 2021 12:10 AM GMT)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர்,

கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 26). சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

சாதிக்பாஷா, ஐ.சி.எப். போலீசில் வேலை செய்யும் போலீஸ்காரர்களான நெப்போலியன் மற்றும் நிரஞ்சன் ஆகியோருடன் சேர்ந்து கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த சில நாட்களாக சாதிக்பாஷா உடல்நலம் பாதிக்கப்பட்டு போலீஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினமும் தன்னுடன் தங்கி இருந்த நெப்போலியன், நிரஞ்சனிடம் தான் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நெப்போலியன் மற்றும் நிரஞ்சன் இருவரும் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை சந்தேகம் அடைந்தனர். பின்னர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆயுதப்படை போலீஸ்காரரான சாதிக் பாஷா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடிதம் சிக்கியது

இது குறித்து தகவல் அறிந்ததும் தலைமைச்செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய சாதிக்பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது அறையில் சாதிக்பாஷா எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்தார். மேலும் இதுபற்றி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சாதிக் பாஷா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

Next Story