விடுதியில் விபசாரம்; 5 பேர் கைது
திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையில் உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்த போலீசார் விடுதியில் திடீர் சோதனை செய்தனர்.
திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையில் உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து. அவரது உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விடுதியில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக விடுதி மேலாளரான ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 60), திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த துணை மேலாளர் கவுரி (47), திருத்தணி கே.ஜி.கண்டிகை, துமஞ்சேரி கண்டிகை மேட்டு தெருவை சேர்ந்த வெங்கடபதி (33), அதிகத்தூர் அந்த பகுதியை சேர்ந்த சரவணன் (53), ஆவடி கன்னியம்மா நகர், ஜீவானந்தம் நகர், 32-வது தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார் (34) ஆகியோரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மைலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story