2½ லட்சம் மனுக்கள் மீது தீர்வு


2½ லட்சம் மனுக்கள் மீது தீர்வு
x
தினத்தந்தி 27 Dec 2021 7:01 PM GMT (Updated: 27 Dec 2021 7:01 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கடந்த 6 மாதங்களில் 2½ லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

கடலூர், 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் கடலூரில் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் 2 ஆயிரத்து 226 மனுக்களை பெற்றார். மனுக்களை பெற்ற அமைச்சர், அவற்றை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
அதையடுத்து பணியின் போது இறந்த கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் கடந்த 6 மாதங்களில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 283 மனுக்கள் பெறப் பட்டது. அதில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 305 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியே 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் குறிஞ்சிப்பாடியில் 3 ஆயிரத்து 5 மனுக்களும் பெறப்பட்டது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார். 
சிதம்பரத்தில் நடந்த முகாமில் 3225 மனுக்களும், புவனகிரியில் 2595 மனுக்களும் என மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த முகாமில் மொத்தம் 11 ஆயிரத்து  88 மனுக்கள் பெறப்பட்டன.  இதிலும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
முகாமில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், மாவட்ட அவை தலைவர் தங்கராசு, வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட டிப்பர் லாரி சங்க தலைவர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் நடராஜன், துணை செயலாளர் அகஸ்டின், மீனவரணி தமிழரசன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், இளைஞரணி இளையராஜா. நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, சன் பிரைட் பிரகாஷ், ராயல் அரிமா சங்க தலைவர் ராஜா உள்பட அரசு அலுவலர்கள், தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நன்றி கூறினார்.

Next Story