தாய், குழந்தைகளை கடத்தி சென்றவர் சிறையில் அடைப்பு
தாய், குழந்தைகளை கடத்தி சென்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தரகம்பட்டி
கரூர் மாவட்டம், கடவூர் சிந்தாமணிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). இவரது மனைவி பிரீத்தா(26), இந்த தம்பதிக்கு 4 மாத கைக்குழந்தையுடன் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மனைவி மற்றும் 2 மகள்களையும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பால் வாகன டிரைவர் மணிகண்டன்(22) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கோவிந்தராஜ், சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுக்க காலதாமதம் நடத்துவதாக கூறி கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்றுகூடி கடந்த 22-ந் தேதி சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாயமானவர்களை கண்டுபிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன், பிரீத்தாவையும், குழந்தைகளையும் ஏமாற்றி கடத்தி சென்றது தெரிய வந்தது. பின்னர் 4 பேரும் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிரீத்தாவையும், குழந்தைகளையும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணிகண்டனை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story