தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 29 Dec 2021 5:10 PM GMT (Updated: 29 Dec 2021 5:10 PM GMT)

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி முழு உருவ வெண்கல சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்:-

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி முழு உருவ வெண்கல சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அண்ணா, கருணாநிதி சிலைகள்

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அமைந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது கலைஞர் அறிவாலய வளாகத்தில் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது முழு உருவ சிலைகளை நிறுவ மாவட்ட தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி அண்ணா, கருணாநிதி ஆகியோரது முழு உருவ வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 11½ அடி உயரம் கொண்டது. இவை சென்னை மீஞ்சூரில் செய்யப்பட்டவையாகும்.

திறப்பு விழா

இந்த சிலைகள் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது. விழாவுக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளை ‘ரிமோட்’ மூலம் திறந்து வைத்தார். பின்னர் அவர், சிலைகளுக்கு முன்பு நின்று கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து, வீரவாளை பரிசாக வழங்கினார்.

கையெழுத்திட்டார்

பின்னர் கலைஞர் அறிவாலயத்திற்குள் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு மீண்டும் வெளியே வந்தார். அப்போது அங்கு திரளாக கூடி இருந்த தொண்டர்கள் இருக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று அவர்களை பார்த்து கையசைத்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சங்கம் ஓட்டலுக்கு சென்றார். இரவு அங்கு தங்கினார்.
சிலை திறப்பு விழாவில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, சிவசங்கரன், மெய்யநாதன், சக்கரபாணி, செ.ராமலிங்கம் எம்.பி.,, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், ஏனாதி பாலு, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, ஒன்றிய பொறுப்பாளர்கள் முரசொலி(தஞ்சை வடக்கு), செல்வக்குமார(தஞ்சை கிழக்கு), ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ், ஆலக்குடி சாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story