சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை; அதிகாரிகளுக்கு, ககன்தீப் சிங் பேடி உத்தரவு


சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை; அதிகாரிகளுக்கு, ககன்தீப் சிங் பேடி உத்தரவு
x
தினத்தந்தி 30 Dec 2021 9:05 AM GMT (Updated: 30 Dec 2021 9:05 AM GMT)

ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

25 ஆயிரம் பரிசோதனை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தவரையில் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது கடந்த கால நிகழ்வுகளில் தெரியவருகிறது. எனவே தற்சமயம் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை 25 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

தற்பொழுது, கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுள்ள நபர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் அனைத்து மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பணி இடங்கள், மருத்துவ கல்லூரிகள், அறிவியல் கலை கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு அதனடிப்படையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

15 இடங்களில்...

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதித்த நபர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கும் சுமார் 134 மருத்துவமனைகள் உள்ளன. இந்த 134 மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து செல்லும் நபர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் குறித்த விவரங்களை அந்தந்த மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு சிகிச்சை முடிந்து வெளியேறும் நபர்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலர்களின் மூலமாக மேற்கொள்ளப்படவேண்டும்.

தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்யும் மையங்கள் ஏற்கனவே 11 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 15 இடங்களில் முதற்கட்ட பரிசோதனை மையங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story