புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2022 8:04 PM GMT (Updated: 1 Jan 2022 8:04 PM GMT)

புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகாசி, 
புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சிறப்பு பூஜை 
சிவகாசி சிவன் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெப்ப மானியை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல் முருகன் கோவில், பெருமாள் கோவில், அய்யப்பன் கோவில், பேச்சியம்மன் கோவில், சாட்சியாபுரம் உமாமகேஸ்வரி கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
 திருத்தங்கல் முருகன் கோவில், பெருமாள் கோவில், கருநெல்லிசுவாமி கோவில்களில் புத்தாண்டை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செங்கமலநாச்சியார்புரம் விநாயகர் கோவில், காளியம்மன் கோவில்களில் புத்தாண்டை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிவகாசி பஸ் நிலையம், தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அம்மன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
வெம்பக்கோட்டை 
வெம்பக்கோட்டை ஒன்றியம் சல்வார் பட்டி ஊராட்சியை சேர்ந்த அச்சன் குளத்தில் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.  ஏழாயிரம்பண்ணையில் உள்ள காட்டு பெருமாள் கோவில், சிப்பிபாறை மலையில் உள்ள பெருமாள் கோவில், செவல்பட்டி மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், தாயில்பட்டி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், எலுமிச்சங்காய்பட்டியில் சீனிவாச பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
ஆண்டாள் கோவில் 
ஸ்ரீவில்லிபுத்தூரில் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, விஸ்வரூப பூஜை நடைபெற்றது அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில், பெரிய மாரியம்மன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில், முத்துமீனாட்சி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், வி.பி.எம். கல்லூரி சேர்மன் வி.பி.எம். சங்கர், தாளாளர் பழனிசெல்வி சங்கர், கோவில் சேர்மன் தங்கபிரபு, சிந்துஜா தங்கபிரபு, இயக்குனர்கள் காத்தாயினி, ஸ்ரீவாணி, முதல்வர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story