மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வடமாநில வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வடமாநில வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2022 5:53 PM GMT (Updated: 2 Jan 2022 5:53 PM GMT)

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்குவேன் மோதியதில் வடமாநில வாலிபர் பலியானார். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கறம்பக்குடி, 
கல்லூரி மாணவர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மகன் ஹரீஸ் (வயது 18). இவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜபராம் (34) என்பவர் ஹரீசிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டார்.
வடமாநில வாலிபர் பலி
கறம்பக்குடி அருகே உள்ள பில்லு வெட்டுவிடுதி சாலையில் சென்ற போது எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜபராம், ஹரீஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வடமாநில வாலிபர் ஜபராம் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவர் ஹரீஸ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து சரக்குவேனை ஓட்டி வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த சத்தியசீலன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story